கடந்த சனிக்கிழமை ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேலிய குடிமக்கள் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுடன் இந்தியா நிற்பதாக டிவீட் செய்தார். மோதல்களின் வரலாறுகளும் வன்முறையின் அளவும் வெவ்வேறானது என்றாலும் ஹமாஸின் பல தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு இசை நிகழ்வில் இருக்கும் பதின் வயதினர், பூங்காவில் குழந்தைகள், வீட்டில் தாத்தா பாட்டிகள் மற்றும் தொட்டிலில் இருக்கும் குழந்தைகள்கூட கொல்லப்படுவதன் வலியை, பல பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்படுவதன் வலியை உணரும் அளவுக்கான பயங்கரவாத தாக்குதல்களை இந்தியாவும் சந்தித்திருக்கிறது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியபோது திரு. மோதி சொல்லியிருந்த நிலையில், இந்த உணர்வுகள் அனைத்தும் மீண்டும் எழுந்தன. குறிப்பாக காஸா மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய கவலை தனது குடிமக்களின் பாதுகாப்புதான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 85,000 இஸ்ரேலியர்களைத் தவிர (மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்) சுமார் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வேலை செய்கிறார்கள் அல்லது படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் தனி விமானங்களை வைத்திருக்கிறது. தனது ஆரம்பகட்ட நிலைப்பாட்டை கொஞ்சம் நுணுக்கமாகவும் மாற்றியிருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது முதல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஹமாஸ் தாக்குதல்களுக்கான கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. மேலும், “பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் சர்வதேச பொறுப்பை” நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிக்க வேண்டிய உலகளாவிய கடமையை” பற்றியும் அந்த அறிக்கை இஸ்ரேலுக்கு நினைவூட்டியது. கூடவே, பாலஸ்தீனப் பிரச்னையில் தனது “நீண்டகால மற்றும் தொடர்ச்சியான” நிலைப்பாட்டை வெளியுறவுத் துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
பாலஸ்தீனத்துக்கான ஆதரவு நிலைப்பாட்டை தொடரும் அதே வேளையில் 1992ல் இந்தியா இஸ்ரேலுடன் முழுமையான ராஜதந்திர உறவுகளை நிறுவியதிலிருந்து இந்தியா கடந்து வந்த இறுக்கமான பாதையை நினைவூட்டுவதாகவே இந்த அறிக்கை இருக்கிறது. நெருக்கமான இருதரப்பு உறவுகள், வர்த்தகம், தொழில்நுட்ப உதவி, ராணுவ கொள்முதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இஸ்ரேலின் நிலைப்பாட்டிலும் ஒரு மாற்றம் இருந்திருக்கிறது. 2017ல் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமரானார் திரு. மோதி. 2018ல் திரு. நெதன்யாகு இந்தியா வந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்துக்கு பயணம் மேற்கொண்ட
முதல் பிரதமராகவும் திரு. மோதிதான் இருந்தார். 2017ல் ஜெருசலேம் முழுவதையும் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தது. இந்தியா தொடர்ந்து வரைந்து வரும் கொள்கைகள் தெளிவாகவே இருப்பது போல தெரிகிறது: பாலஸ்தீனத்தில் தொடர்ச்சியாக அதே நிலைப்பாட்டை கொண்டிருக்கும் போதும், பயங்கரவாதத்தை எதிர்ப்பது, கண்மூடித்தனமான பழிவாங்கும் குண்டு வெடிப்புகளை ஏற்றுக்கொள்ளாதது போன்ற கொள்கைகள்தான் அவை. இஸ்ரேல் மீதான தனது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு, வரலாற்று வலிகளை சரி செய்கிறோம் என்கிற வாதத்தை எல்லாம் ஹமாஸ் பயன்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான அரசு கிளர்ச்சிக் குழுவைப்போல நடந்துகொள்ள முடியாது. காஸாவை தொடர்ந்து தாக்குதலுக்கு உட்படுத்தி வரும், அனேகமாக ஒரு தரைவழித் தாக்குதலுக்கும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேல் காஸாவில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வண்டும் என்று சமீபத்தில் கோரியிருக்கிறது. இது சமநிலைப்படுத்தும் கொள்கையில் இந்தியா எதிர்கொள்ளும் சவாலை இன்னும் சிக்கலாக்கும்.
COMMents
SHARE