இந்தியாவின் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மிசோரம், நாட்டின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிவில் சமூகம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு மாநிலம். நவம்பரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டியைக் காணத் தயாராக இருக்கிறது இந்த மாநிலம். மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், மிசோரமின் அரசியல் போட்டி, சமூக சேவை, பொது அந்தஸ்து போன்றவற்றில்தான் அதிகம் சார்ந்திருக்கிறதே தவிர பணம் அல்லது படை பலத்தில் அல்ல. மத அமைப்புகள், சமூக அமைப்புகளின் ஆதரவு ஆகியவை வேட்பாளருக்கான முக்கிய நிபந்தனைகளாக இருக்கும். ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப்) அதன் பாரம்பரிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசுடன் மட்டுமல்லாமல், இந்த முறை கடுமையான சவாலை முன்வைத்துள்ள சோரம் மக்கள் இயக்கத்துடனும் மோத வேண்டியிருக்கும். சபாநாயகரான லால்ரின்லியானா சைலோ, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்திருப்பதால் அக்கட்சியிலிருந்து தலைவர்கள் விலகிச் செல்லவும் ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னாள் கிளர்ச்சி அமைப்பான எம்.என்.எஃப்-பின் அனுபவமிக்க தலைவரான முதல்வர் சோரம்தங்கா, மிசோ வாக்காளர்களின் ஆதரவைப் பெற இனப் பிரச்னையை கையிலெடுத்திருக்கிறார். அண்டை மாநிலமான மணிப்பூரில் இன மோதலில் சிக்கியிருக்கும் குக்கி-சோ மக்களின் நலனுக்காக குரல் கொடுத்ததன் மூலமும், மிசோ மக்களுடனான அவர்களின் இன ரீதியான பிணைப்பைக் காரணம் காட்டி மியான்மரில் இருந்து வந்த அகதிகளின் பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை புறக்கணித்ததன் மூலமும், திரு. சோரம்தங்கா தனது எதிரிகளைவிட ஒரு அடி முன்னால் இருக்க முயற்சிக்கிறார். இந்த விவகாரத்தில் மிசோரமில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசுடனும் ஆளுங்கட்சியுடனும் ஒத்திருந்தாலும், எம்.என்.எஃப்-பின் உரத்த நிலைப்பாடு அக்கட்சிக்கு ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மோதல் உச்சத்தில் இருந்தபோது, குக்கி-சோ மக்களுக்கு ஆதரவாக சிவில் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இந்தப் பிரச்னை மிசோ வாக்காளர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையில் வளர்ச்சியில் எம்.என்.எஃப் செய்திருக்கும் சாதனைகளை சோரம் மக்கள் இயக்கம் கையில் எடுத்து, லுங்லெய் முனிசிபல் தேர்தல்களில் நல்ல வாக்குகளை பெறுவதற்கு அதை பயன்படுத்திக் கொண்டது. இது, நகர்ப்புறங்களிலும் அதன் செல்வாக்கு உயர்ந்திருப்பதை காட்டுகிறது. கிராமப்புறங்களில், மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் சோரம் தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸிடமிருந்து எம்.என்.எஃப்-புக்கு வலுவான எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. கடந்த ஓராண்டில் இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போதுகூட, மாநிலத்தில் பணவீக்கம் ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது. இது வாக்காளர் தேர்வுக்கு பின்னால் உள்ள காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இந்தியாவின் மக்கள்தொகையில் 0.1% மற்றும் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% பங்களிக்கும் ஒரு சிறிய மாநிலமாக இருந்தபோதிலும், மிசோரம் ஒரு முக்கியமான எல்லை மாநிலம். பெரும்பாலும் வேளாண் பொருளாதாரமாக இருந்தபோதிலும் சேவைகள் மற்றும் சுற்றுலாத் துறைகள் வழியாக பொருளாதார வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிச் செயல்படு’ உத்தியின் ஒரு முக்கியமான நுழைவாயிலாக இம்மாநிலம் கருதப்பட்டாலும், மிசோரமை மியான்மருடனும் அதற்கு அப்பாலும் இணைக்கும் உள்கட்டமைப்பு மற்றும் திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. பல கட்சி போட்டி என்பது இன ஒற்றுமை விஷயங்களில் செய்வது போலவே வளர்ச்சி பற்றிய விஷயங்களிலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
COMMents
SHARE