ஆட்சியில் இருக்கும் அரசுகள் அடுத்த தேர்தல்களில் ஆட்சியை இழப்பதுதான் ராஜஸ்தானின் வரலாறு. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அந்த போக்கை முறியடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வரவும், மாநிலத்தில் தலைமை மாற்றத்தை ஏற்படுத்தவும் அந்த வரலாற்றைத்தான் நம்பியிருக்கிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான நேரடிப் போட்டியில் இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதினாலும், சமாளிக்க வேண்டிய உட்கட்சிப் பிரச்சினைகள் இரு கட்சிகளுக்கும் இருக்கின்றன. நவம்பர் 25ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. புதிய நலத்திட்டங்கள் மற்றும் பயனுள்ள மக்கள் தொடர்பு ஆகியவற்றின் மூலம் காங்கிரஸை படுகுழியிலிருந்து மீட்டிருப்பதுடன் ஆட்சிக்கு எதிரான மனநிலையை மழுங்கடித்து தொண்டர்களின் நம்பிக்கையை உயர்த்தியிருக்கிறார் திரு. கெலாட். இயல்பான ஒரு தோல்வியைத் தவிர்த்துவிட்ட காங்கிரஸ், இப்போது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, கடைசிக் கட்டத்தில் தனது பரப்புரையை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கிறது. திரு. கெலாட்டின் இளைய சகாவும், உச்ச பதவிக்கான போட்டியாளருமான சச்சின் பைலட், பிரச்னைகளை மறந்து திரு. கெலாட்டுக்கு ஆதரவாக நிற்கிறார். முதலமைச்சருக்கு எதிரான, ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்றாலும், வலுவான எதிர்ப்புகள் இருக்கும் இடத்தில் காங்கிரஸின் தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மனநிலை தலைதூக்கக் கூடும். கட்சிக்கு ஒரு கடினமான சூழ்நிலை இது. தவிர, ஏற்கனவே இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக உகந்த எண்ணிக்கையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பது திரு.கெலாட்டின் அரசியல் திறமைக்கான ஒரு சோதனையாக இருக்கும்.
கட்சியில் தனக்கென ஒரு தொண்டர் படையை கொண்டிருக்கும் உறுதியான ஒரு தலைவரான முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவை சார்ந்திருப்பதை பா.ஜ.க கைவிட விரும்புகிறது. முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த போவதில்லை என்பதை மத்திய தலைமை தெளிவுபடுத்தியிருக்கிறது. அவரது நம்பிக்கைக்குரிய பலருக்கு ஏற்கனவே போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் பலர் வாய்ப்பை இழக்கக்கூடும். பா.ஜ.க அறிவித்திருக்கும் 41 வேட்பாளர்களில் 7 பேர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். கட்சியின் பல தலைவர்கள் முதல்வராகும் கனவிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கட்சியின் தலைமைத்துவத்தில் ஒரு தலைமுறை மாற்றம் நடந்து வருவதாக வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோதியின் செல்வாக்கின் பின்னணியில் இந்த குழப்பம் அர்த்தமற்றது என்பது மட்டுமல்ல; அது கட்சிக்கு உதவக்கூடும் என்றும் பா.ஜ.க. நம்புகிறது. திருமிகு. ராஜே மாநிலத்திலும் கட்சியிலும் தனது அரசியல் அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதற்கு வெளிப்படையான கலகத்துக்கு சற்று குறைவான ஒரு வழியை தேடுவார். அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தானில்தான் பா.ஜ.கவுக்கு மிக அதிக ஆர்வம் இருக்கிறது. ராஜஸ்தானின் முடிவு 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதன் வியூகத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
COMMents
SHARE