எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் மீது 2010ம் ஆண்டு தொடரப்பட்ட கிரிமினல் வழக்குக்கு உயிர் கொடுப்பது, தவறான நோக்கத்தை கொண்டிருப்பது போல தோன்றுகிறது. அக்டோபர் 21, 2010ம் தேதியன்று புதுதில்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிளவுபடுத்தும் பேச்சுகளுக்காக திருமிகு. ராய் மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் உசேன் ஆகியோர் மீது வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்ததற்கு வேறு எந்த விளக்கமும் இருக்க முடியாது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் பிற தண்டனை விதிகளின் கீழ் நியூஸ்கிளிக்கின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா சமீபத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகள் பழைய வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பது, சகிப்பின்மையைக் காட்டுவதோடு, சிவில் சமூகத்தில் இருக்கும் அரசின் எதிரிகள் மற்றும் வெளிப்படையான விமர்சகர்களுக்கு எதிரான பழிவாங்கும் பாணியைப் பின்பற்றுவதாகவே இருக்கிறது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு புகார்தாரர் கோரியபடி, அந்த உரைகள் தேசத் துரோக வழக்கு தொடர தகுதியானவை என்று தில்லி காவல்துறை அப்போது நினைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பெருநகர மாஜிஸ்திரேட் ஒருவர், காவல்துறையின் வாதத்தை நிராகரித்து, நவம்பர் 27, 2010 அன்று, முதல் தகவல் அறிக்கையை தாக்கல்செய்ய உத்தரவிட்டார். உத்தரவைப் பின்பற்றி காவல்துறையினர், தேசத் துரோகம், பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் அறிக்கைகள், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் பொது தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் முதல் தகவலறிக்கையை தாக்கல் செய்தார்கள். முதல் தகவலறிக்கையில் ‘சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு’ தண்டனை அளிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (ஊபா) பிரிவு 13ம் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘ஆசாதி: ஒரே வழி’ என்ற தலைப்பில் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக வழக்குத் தொடர அன்றைய அரசு விரும்பவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. காரணம், காஷ்மீர் பிரச்சினைக்கு மூன்று நபர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான அப்போதைய முயற்சியை சீர்குலைக்க அரசு விரும்பவில்லை. அதன் பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்தது. அதன் பின்னர் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தல் உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த கால அரசியல் பேச்சுகளை இப்போது குற்றமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தேசத் துரோகம் தவிர மற்ற குற்றங்களுக்கு வழக்குத் தொடர திரு. சக்சேனா ஒப்புதல் அளித்திருக்கிறார். சட்டத்தின் பிரிவு 45க்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் நிலையில் அதைப் பெற கடுமையான கால வரம்புகளை விதிகள் வரையறுப்பதால், காவல்துறை ஊபா குற்றச்சாட்டை வலியுறுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வழக்கு விசாரணை வரம்புக்குட்பட்டதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கான வரம்பு மூன்று ஆண்டுகள்தான். ஒப்புதல் வழங்கப்பட்ட 153ஏ, 153பி, 505 ஆகிய 3 பிரிவுகளுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனைதான் இருக்கிறது. வரம்பைக் கணக்கிடும்போது ஒப்புதல் எதிர்பார்க்கப்படும் காலத்தை விலக்க விதிகள் அனுமதித்தாலும், வரம்புக் காலத்திற்குப் பிறகு அனுமதி கோரப்பட்டால் நீதிமன்றங்கள் அத்தகைய விலக்கை அனுமதிக்க வாய்ப்பில்லை.
COMMents
SHARE