கிட்டத்தட்ட ஒரு டஜன் வரி சிகிச்சைகளில் நிலவி வந்த தெளிவற்ற தன்மைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கடந்த சனிக்கிழமை சரி செய்தது. இவற்றில் வங்கிக் கடன்களுக்கான கார்ப்பரேட் மற்றும் தனி நபர் உத்தரவாதங்கள் போன்ற சில அம்சங்கள், ஜூலை 2017ல் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நிலவி வருபவை. கால்நடை தீவனச் செலவைக் குறைக்கவும், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை விரைவாக செலுத்துவதற்கும் ஏதுவாக சர்க்கரை ஆலைகளுக்கு பணப்புழக்கத்தை எளிதாக்க உதவும் வகையில், வெல்லப்பாகு மீதான ஜி.எஸ்.டியை 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக கவுன்சில் குறைத்தது. விகித மாற்றங்கள் மற்றும் வசந்த கால தூய்மைப் பணி பற்றிய தெளிவுபடுத்தல்களைத் தவிர, இதன் குறிப்பிடத்தக்க விளைவுகளில் ஒன்று, மதுவுக்குப் பயன்படுத்தப்படும் கூடுதல் நடுநிலை ஆல்கஹாலுக்கு (ஈ.என்.ஏ) வரி விதிக்க கவுன்சிலின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவுதான். மனித நுகர்வுக்கான மது, இன்னும் ஜி.எஸ்.டி வலைக்கு வெளியே இருப்பதால், முக்கிய மூலப்பொருளாக இருக்கும் ஈ.என்.ஏ அல்லது இன்னும் அதிக வலிமை கொண்ட குடிக்கக் கூடிய ஆல்கஹால் மீதான மறைமுக வரி விதிப்பை, இறுதி தயாரிப்பு மீதான மாநில வரிகளுக்கு எதிராக அமைக்க முடியாது. நீதிமன்றங்கள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ள நிலையில், இந்த சிக்கலான பிரச்சினையில் தெளிவு பெற தொழில்துறை பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.
2022ல் இரண்டு முறை மட்டுமே கூடிய கவுன்சில், சமீபத்திய முடிவுகளில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்வது தொடர்பான ஒரு சில செயல்திட்ட அம்சங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு நான்கு முறையும், நான்கே மாதங்களில் மூன்று முறையும் கூடியிருப்பது மகிழ்ச்சியான செய்தி. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வயது வரம்புகள் இப்போது மற்ற தீர்ப்பாயங்களுடன் ஒத்திசைந்திருக்கும் நிலையில் – நிச்சயம் இந்த கவனக்குறைவு தவிர்க்கப்பட்டிருக்கலாம் - அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பலாம். எப்படியிருந்தாலும் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஜி.எஸ்.டி இழப்பீட்டு செஸ் குறித்த ‘முன்னோக்கு திட்டமிடல்’ குறித்தும் அதை எந்த வகையான கூடுதல் வரியுடன் மாற்றலாம் என்பது குறித்தும் விவாதிக்க பிரத்தியேகமாக கூட்டம் நடத்த வேண்டும் என்ற கவுன்சிலின் தீர்மானமே மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யின் முதல் ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடு செய்ய ‘நல்ல மற்றும் எளிய வரி’க்கு மேல் ஒரு காலவரையறை கொண்ட வரியாக முதலில் தொகுக்கப்பட்ட நிலையில், கோவிட் -19 தொற்றுநோயால் வரி வசூலில் ஏற்பட்ட தாக்கம், காற்றூட்டப்பட்ட பானங்கள், புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது விதிக்கப்படும் செஸ் வரியை மார்ச் 2026 வரை நீட்டிக்கத் தூண்டுகோலாக அமைந்தது. சில மோசமான பொருட்களை தவிர்க்கத் தூண்டுவது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால், புதிய செஸ் வரி தனித்து விடப்படக்கூடாது. மாறாக ஜி.எஸ்.டியின் சிக்கலான பல விகித கட்டமைப்பைச் சரிசெய்வதன் ஒரு பகுதியாக அது இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த சீரமைப்பு நடவடிக்கை, சமீபத்திய காலங்களில் வலுவான வருவாய் வரவு இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக பரிசீலிக்கப்படவில்லை. அடிக்கடி எரிச்சலூட்டும் மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு ஒரு முழுமையான சீர்திருத்தத் திட்டம் தேவை. இதில் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் ஆல்கஹால் போன்ற விலக்கப்பட்டிருக்கும் பொருட்களை கொண்டு வருவதற்கான ஒரு வரைபடமும் இருக்க வேண்டும்.
COMMents
SHARE