அடுத்த மாதம் நடைபெற உள்ள சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலை மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ‘அரையிறுதிப் போட்டியாக ஒப்பிடும் ஒரு போக்கு இங்கு நிலவுகிறது. ஆனால் பல மாநிலங்கள், பெரிய நாடுகளுக்கு இணையாக மக்கள் தொகையை கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கென்று குறிப்பிட்ட தேர்தல் கவலைகள் இருப்பதால் இத்தகைய ஒப்பீடு சரியாக இருக்காது. இந்த குறிப்பிட்ட தேர்தல் கட்டத்தை வேறுபடுத்திக் காட்டும் ஒரு விஷயம் ஐந்தில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கும் இடையிலான போட்டியின் இருமுனைத்தன்மைதான். மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே பிராந்திய கட்சிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள மூன்று வட மத்திய இந்திய மாநிலங்களிலும், மத்திய அரசின் செல்வாக்கையும், அதன் வெளிப்படையான இந்துத்துவ கருத்தியலுக்கான ஆதரவையும் கொண்டு மக்களை ஈர்க்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளிப்பதன் மூலமும், நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அது செலுத்தியிருக்கும் கவனம் பற்றி முன்வைப்பதன் மூலமும் அல்லது உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களின் பட்டியல் மூலமும் இதை முறியடிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது அரசின் நலத்திட்டங்களால் செல்வாக்குடன் இருந்தாலும், அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் அதே நம்பிக்கையை பெறவில்லை. இதனால் இப்போதைக்கு கோஷ்டிப் பூசல் ஓய்ந்ததாகத் தோன்றினாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது சிக்கலானது. மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிலையில் பொருளாதாரத்தில் மற்றும் சமூக பாகுபாடு தொடர்பான பிரச்சினைகளில் அரசின் செயல்திறன் ஆகியவற்றில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்கிறார். ஆனால் மாநிலத்தில் இந்துத்துவ கருத்தியலுக்கு இருக்கும் வளமான களம், பா.ஜ.கவுக்கு அர்ப்பணிப்புள்ள வாக்காளர்களை வழங்கியிருக்கிறது.
சத்தீஸ்கரில், முதலமைச்சர் பூபேஷ் பாகெல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய எதிர்ப்பு நிலையை தடுத்திருப்பதோடு, விவசாயக் கடன் தள்ளுபடி, பயிர்கள் மற்றும் சிறு வனப் பொருட்களுக்கான ஆதரவு விலை அதிகரிப்பு போன்ற தனது அரசின் நலத்திட்ட சாதனைகளை முன்வைத்து போராட நினைக்கிறார். தவிர, வாக்காளர்களின் பிராந்திய அடையாள உணர்வை தூண்டவும் அவர் நினைக்கிறார். ஆனால், பா.ஜ.க மிக நெருக்கமாகவே இருப்பது ஒரு அச்சுறுத்தல். பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் உட்கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து புத்துயிர் பெற்ற காங்கிரஸ், இந்த மூன்று மாநிலங்களிலும் கூடுதல் நிதிகளையும் அதிக வளங்களையும் கொண்ட பா.ஜ.கவை எதிர்கொள்ள அமைப்பு ரீதியான தகுதியைக் கொண்டிருக்கிறது என்றும், அதன் செயல்திறன் 2024 தேர்தலில் போட்டியிடும் திறனை தீர்மானிக்கும் என்றும் நம்புகிறது. குறிப்பாக கர்நாடகாவில் அதன் வெற்றிக்குப் பிறகு தெலங்கானாவில் காங்கிரஸின் மறுமலர்ச்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வெறும் குட்டையை குழப்பும் என்கிற நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டு, ஆளும் பாரத் ராஷ்டிர சமிதிக்கு கடும் போட்டியை தன்னால் தர முடியும் என்று இந்த பாரம்பரியமான கட்சி நம்புகிறது. மிசோரமைப் பொறுத்தவரையில் சோரம் மக்கள் இயக்கத்தின் தோற்றம் பல சமன்நிலைகளை மாற்றியிருக்கிறது. பாரம்பரியமாக இரு கட்சி போட்டியை எதிர்கொள்ளும் இந்த மாநிலத்தில் இப்போது மும்முனை போட்டி நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஆளும் மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த முதலமைச்சர் சோரம்தங்கா மணிப்பூர் நிலைமை மற்றும் அவரது அரசின் நிலைப்பாடு தனது கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். இது தேர்தல்கள் “அரையிறுதி” இல்லை என்றாலும் போட்டியில் இருக்கும் இரு தேசிய கட்சிகளுக்கும் இழக்கவும் பெறவும் நிறையவே இருக்கிறது.
COMMents
SHARE