நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் பிறருக்கு எதிராக தில்லி காவல்துறை பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கை பயங்கரவாத செயல்பாட்டை மட்டுமல்ல உண்மையில் எந்தவொரு குற்றத்தையும் வெளிப்படுத்தாத ஆனால் கடுமையான குற்றச்சாட்டுகளின் தெளிவற்ற ஒரு கலவையாக இருக்கிறது. பதிப்பிக்கப்பட்ட எந்தவொரு கட்டுரையையும் மேற்கோள் காட்டாமல், நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதற்கான சதி என்பதில் ஆரம்பித்து, 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைப்பது, அரசுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவது, அத்தியாவசிய சேவைகளை சீர்குலைப்பது வரை குற்றங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (ஊபா) மற்றும் சதி மற்றும் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் தொடர்பான தண்டனை விதிகளைப் பயன்படுத்துகிறது. முக்கியமாக சட்டவிரோத நடவடிக்கை அல்லது பயங்கரவாத செயல் என்று விவரிக்கக்கூடிய எந்தவொரு வெளிப்படையான செயலையும் அது குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தும் நோக்கில் தேசவிரோத சக்திகளால் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டது என்ற பொதுவான ஒரு விளக்கம் இருக்கிறது. அருணாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரை “இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை” என்று காட்டுவதற்கான மின்னஞ்சல் பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ‘சதி’யை குறிப்பிடுவதோடு, 2020-21ஆம் ஆண்டின் விவசாயிகளின் போராட்டத்தை நீட்டிக்கவும், அதன் மூலம் சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை சீர்குலைக்கவும் சதி நடந்ததாக சொல்கிறது.
மொத்தத்தில், சீன நிதியை பயன்படுத்தி பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும், சட்டவிரோத நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதாகவும் நாட்டின் பாதுகாப்பு சீர்குலைக்கப்படுவதாகவும் ஒரு வழக்கை கட்டமைக்க அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் அனுப்பிய நிதிகளுடன் நியுஸ்கிளிக்கின் உள்ளடக்கத்தை காவல்துறை இணைக்க முற்படுகிறது என்பது தெளிவு. ஊபா சட்டமும் அத்தகைய துஷ்பிரயோகத்துக்கு உகந்த ஒன்றாக இருக்கிறது. காரணம், பரவலாக வரையறுக்கப்பட்ட அதன் விதிகள், மக்களின் குற்ற செயல்களைப் போலவே அவர்களது ‘குற்ற சிந்தனைகளுக்காகவும்’ குற்றவாளிகளாக்க உதவுகிறது. ஊபாவை நாடுவது என்பது, அதிருப்தியாளர்கள் மற்றும் விரும்பதகாதவர்களின் சிறைவாசத்தை நீடிப்பதற்கான ஒரு உத்தி என்பதோடு, பரந்த ஊடக உலகுக்கு ஒரு அச்சுறுத்தும் செய்தியை அனுப்புவதாகவும் இருக்கிறது. மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் பா.ஜ.க, ‘சீன சதி’ என்கிற கோட்பாட்டை கையிலெடுக்கும் சாத்தியங்களும் இருப்பதால் தேர்தல் விளைவுகளும் இதில் இருக்கின்றன. இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கியதாகக் கூறப்படுவது சம்பந்தமே இல்லாத இந்த முதல் தகவல் அறிக்கையில் ஒரு சாதாரண குறிப்பாக மட்டுமே இருக்கிறது என்பதும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதற்கான இந்த வழிகள் பற்றி தனி விசாரணை தேவையா என்பதும் இன்னொரு கேள்வி. இந்த நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக ஒரு சட்ட கட்டமைப்பை உருவாக்க உதவியவர்களில் வழக்கறிஞரும் ஒருவர் என்று குறிப்பிடும்போது, சட்ட சேவைகளை குற்றமாக்குவது குறித்தும் காவல்துறையின் பரிசீலித்து வருவதுபோலத் தெரிகிறது. ஒரு தொந்தரவான போக்கை இந்த வழக்கு முன்னிறுத்துகிறது: தனிநபர் மற்றும் ஊடகங்களுக்கான உரிமைகளை பறிப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களையும் தேசிய பாதுகாப்பு என்கிற உணர்வையும் பயன்படுத்தும் இயல்பு இந்த ஆட்சிக்கு இருப்பதை அது காட்டுகிறது.
COMMents
SHARE