உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுபவர்கள் அனைவருமே வரலாறு காணாத சாதனைகளை படைத்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும், வெற்றியாளர் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவது, காலம் மற்றும் சூழலுடன் நிறைய தொடர்பு கொண்டதாக இருக்கலாம். அதனால்தான் கோவிட் -19க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளை உருவாக்க உதவியதற்காக கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் இந்த வருட நோபலுக்கான பாதுகாப்பான தேர்வாக இருந்திருப்பார்கள். 2023ஆம் வருட நோபல் அறிவிப்பு ஆச்சரியமளிக்கவில்லை. காரணம், இந்த கண்டுபிடிப்பின் நன்மைகள் இன்னும் மக்களை உயிருடன் வைத்திருப்பதோடு, அவர்களை மருத்துவமனைகளிலிருந்து வெளியேயும் வைத்திருக்கிறது. அனைத்து கேள்விகளுக்கும் அது பதில் வைத்திருந்தது: மருத்துவத்திற்கான நோபல் பரிசு ‘மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை’ வழங்கும் ஒரு கண்டுபிடிப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் எம்.ஆர்.என்.ஏ. சந்தேகத்திற்கு இடமின்றி அதை செய்தது. இந்த நோபல் அறிவியலில் இருக்கும் ஒரு பெண்மணியின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது என்கிற வகையிலும் இது முக்கியமானது: மருத்துவத்திற்கான நோபல் பரிசை (இதுவரை வழங்கப்பட்ட 225 பேரில்) 13 பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இதுவரை 62 பெண்கள் மட்டுமே எல்லாப் பிரிவிலும் சேர்த்து நோபல் பரிசை பெற்றிருக்கிறார்கள். ஆனால், 894 ஆண்களுக்கு இதுவரை நோபல் வழங்கப்பட்டிருக்கிறது.
பல துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் அனைத்து முரண்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட உறுதியான அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றிலிருந்துதான் தவிர்க்கவே இயலாமல் சிறந்த விளைவுகள் வெளிப்படுகின்றன. அது வெறும் ஒரு சாத்தியமாக மட்டுமே இருந்த போதுதான் ஹங்கேரிய உயிர் வேதியியலாளர் கடாலின் கரிகோ எம்.ஆர்.என்.ஏவால் ஈர்க்கப்பட்டார். மனித உயிரணுக்களில், டி.என்.ஏவில் குறியிடப்பட்ட மரபணு தகவல்கள் மெசஞ்சர் ஆர்.என்.ஏவுக்கு (எம்.ஆர்.என்.ஏ) மாற்றப்படுகின்றன. பின்னர் இது புரத உற்பத்திக்கான வார்ப்புருவாகப் பயன்படுத்தப்படுகிறது. புரதங்கள் உயிரணுக்களின் முக்கிய கட்டமைப்பு கூறுகளாக இருப்பதோடு, வளர்ச்சி மற்றும் சீரமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 1980களில், இன் விட்ரோ டிரான்ஸ்கிரிப்ஷன் என்கிற ஒரு முறையின் மூலம் தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்காக எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்துவதற்கான யோசனை உருவானது. ஆனால் இதை தருவதில் உள்ள சவால்கள் மற்றும் அழற்சி எதிர்வினை உள்ளிட்ட பல தடைகள் காரணமாக, இதில் பணியாற்றுவதற்கான ஆர்வம் குறைந்தது. இருந்த போதும் சோர்ந்து விடாமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தான் உதவிப் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் சிகிச்சைக்கு எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்துவதற்கான முறைகளை உருவாக்கும் பாதையில் கரிகோ தொடர்ந்து சென்றார். நோயெதிர்ப்பு கண்காணிப்பு மற்றும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு எதிர்வினைகளை செயல்படுத்துவதில் முக்கியமான செயல்பாடுகளைக் கொண்ட டென்ட்ரிடிக் செல்களை ஆய்வு செய்து வந்த நோயெதிர்ப்பு நிபுணர் வெய்ஸ்மேன் பின்னர் அவருடன் சேர்ந்தார். பல வருடங்களக எம்.ஆர்.என்.ஏவில் அடிப்படை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதன் விநியோக பாதைகளை எளிதாக்கவும், அழற்சி எதிர்வினைகளிலிருந்து விடுபடவும் முடிந்தது. ஒரு புதிய யோசனை இறுதியாக பலனளித்தது. இது கோவிட்-19 தொற்றுநோய் பரவல் ஏற்படுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு, 2005ல் நடந்தது. ஆனால் அதற்கான காலமும் சூழலும் 2019ல்தான் உருவானது. கோவிட் -19 வைரஸின் மேற்பரப்பில் காணப்படும் எஸ் புரதத்தை உருவாக்க மனித உயிரணுக்களுக்கு அறிவுறுத்த விஞ்ஞானிகள் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிக்கு பயிற்சியளித்தார்கள். இது, ஒரு தனிநபர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் வைரஸை எதிர்த்துப் போராடும் நோயெதிரிகளை (antibodies) உடல் உருவாக்க காரணமாகிறது. பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.
COMMents
SHARE